

ஜெயப்பிரியா, மணிகண்டன், பார்த்திபன், குபேந்திரன்
விருத்தாசலம்: பண்ருட்டி அருகே முதியவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முற்பட்ட அவரது மருமகள் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(64). இவர் நேற்று முன்தினம் இரவு கந்தன் என்பவரது பைக்கில் மாளிகம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைப் பின் தொடர்ந்து ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் பைக்கை மறித்து, ராஜேந்திரனைக் கீழே இறக்கி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
தீக்காயமடைந்த ராஜேந்திரனை, கந்தன் உள்ளிட்ட சிலர் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த கடலூர் எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் மகள் ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில், 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார் ஒட்டுநர் பார்த்திபனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றியது பண்ருட்டியைச் சேர்ந்த மணிகண்டன், குபேந்திரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பண்ருட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(39), சத்தியமூர்த்தி தெரு, குபேந்திரன்(29), கார் ஓட்டுநர் சித்திரைச்சாவடி பார்த்திபன்(28), ராஜேந்திரனின் மருமகள் ஜெயப்பிரியா(28) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரனின் மருமகளான ஜெயப்பிரியாவுக்கும் தீ வைத்து எரித்து தப்பியோடிய மணிகண்டன் என்பவருக்கும் கூடா நட்பு இருந்து வந்துள்ளது. இதனை ராஜேந்திரன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ராஜேந்திரன் மீது கோபத்தில் இருந்த ஜெயப்பிரியா, மணிகண்டன் இருவரும் குபேந்திரன், பார்த்திபனுடன் சேர்ந்து ராஜேந்திரனை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.