தேனியில் நரிக்குறவர்களுக்கு உணவு வாங்கி தந்தவர் மீது தாக்குதல்: ஹோட்டல் ஊழியர் கைது

தேனியில் நரிக்குறவர்களுக்கு உணவு வாங்கி தந்தவர் மீது தாக்குதல்: ஹோட்டல் ஊழியர் கைது
Updated on
1 min read

தேனி: கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நரிக்குறவர்களையும், நாடோடி களையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தந்த பிரச்சினையில் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக்(62). இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தேனி வந்திருந்தார். கர்னல் ஜான்பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிடச் சென்றார். அப்போது வெளியில் நின்றிருந்த நரிக்குறவர்கள் இவரிடம் யாசகம் கேட்டுள்ளனர்.

ஆனால் சித்திக் பணம் தராமல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஐந்து பேருக்கும் உணவு வாங்கித் தந்துள்ளார். இதைப் பார்த்ததும் மேலும் 3 பேர் வந்தனர். அவர்களுக்கும் உணவு பரி மாறப்பட்டது. இதைப் பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த யாசகர் களும், நாடோடிகளும் திரண்டு வந்தனர்.

ஆனால் சித்திக் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஹோட்டல் முன்பு நாடோடிகள் வெகுநேரம் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கடை ஊழியர்களுக்கும், சித்திக்குக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலை யில் கடை ஊழியர் கோவிந்தராஜ், சித்திக்கை தாக்கினார்.

இதில் காயமடைந்த சித்திக் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில், தேனி காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் கடை ஊழியர் கோவிந்தராஜை கைது செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in