புதுச்சேரி | கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு: பொறுப்பாளர் மீது வழக்குப் பதிவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடபப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்க நிர்வாக பொறுப்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக கொம்பாக்கத்தைச் சேர்ந்த எம்பெருமாள்(69) உள்ளார். சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளராகவும், முதுநிலை எழுத்தராகவும் பாப்பான்சாவடியைச் சேர்ந்த கதிரவன் (48) என்பவர் பணியாற்றி வருகிறார். இதில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதனிடையே, இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, 5 பேர் அடங்கிய தணிக்கை குழுவினர் கடந்த 18-ம் தேதி கூட்டுறவு கடன் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது 201 நகைக்கடன் கணக்குகள் இருப்பதாகவும், அதில் பாதுகாப்பு பெட்டகத்தில் 198 நகைக்கடன் கணக்குக்கு உண்டான நகைகள் இருப்பதாகவும், 18 நகைக்கடன் கணக்குக்கு உண்டான 588.500 கிராம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.33 லட்சமாகும். இது பற்றி விசாரித்தபோது சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் அந்த நகைகளை திருடியதும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் திடீரென விடுமுறையில் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in