தாம்பரம் | கிறிஸ்தவ தேவாலய சொத்துகளை விற்று ரூ.11 கோடி மோசடி செய்த போதகர் கைது

சிரில் ராஜ்
சிரில் ராஜ்
Updated on
1 min read

தாம்பரம்: கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துகளை ரூ.11 கோடிக்கு விற்று மோசடி செய்த போதகர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் ரோமன் கத்தோலிக் தேவாலயங்களின் தலைமையிடமான பேராயம் செயல்பட்டு வருகிறது. இந்த பேராயத்துக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியைச் சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பேயராயத்துக்கு சொந்தமான படூர், தையூர், இருமலையூர், புனித தோமையார் மலை ஆகிய இடங்களில் உள்ள பல கோடி மதிப்புள்ள நிலங்களை சட்டவிரோதமாக பேராயத்தின் அனுமதி பெறாமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் நிர்வாகி ஜார்ஜ் ஸ்டீபன் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின்படி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சிரில் ராஜ் சுமார் 66 பேருக்கு சட்ட விரோதமாக ரூ.11.68 கோடி நிலங்களை விற்பனை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in