Published : 14 May 2023 04:17 AM
Last Updated : 14 May 2023 04:17 AM
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (40). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் முன்புறம் ஓரமாக 8 அடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்க் உள்ளது. கடந்த 22 நாட்களுக்கு முன்பு இவர் இந்த செப்டிக் டேங்கை புதிதாக கட்டினார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில், புதி தாக கட்டப்பட்டுள்ள செப்டிக் டேங்க்கின் உள்ளே உள்ள பலகைகளை பிரிப்பதற்கான பணியை கொத்தனாருடன் இணைந்து கிருஷ்ண மூர்த்தி செய்ய முற்பட்டார். இதற்காக முதலில் செப்டிக் டேங்கிற்குள் கிருஷ்ண மூர்த்தி இறங்கினார். குறிப்பிட்ட நேரத்தில் மேலே வராத நிலையில், சத்தம் கொடுத்துப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பாலச் சந்திரன் (32) உள்ளே இறங்கினார்.
அவரும் வெளியே வரவில்லை. இதையடுத்து, கிருஷ்ண மூர்த்தியின் வீட்டிற்கு வந்திருந்த தலைவாசல் பகுதியைச் சேர்ந்த உறவினர் சக்திவேல் (22) உள்ளே இறங்க அவரும் வெளியே வரவில்லை. வீட்டில் இருந்த பெண்கள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க, அங்கு இளைஞர்கள் திரண்டனர். அவர்களில் இருவர் இறங்க முற்பட, அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் செப்டிக் டேங்க் கான் கிரீட்டுகளை உடைத்தனர். உள்ளே 3 பேரும், விஷ வாயுவை சுவாசித்து, இறந்த நிலையில் கிடந்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் உள்ளே இறங்கி, 3 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT