

சென்னை: அசோக் நகரில் 207 பவுன் நகை திருடுபோன விவகாரத்தில் வேலை பார்த்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய செவிலியரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் மதுரகவி(85). இவர் கடந்த மே 6-ம்தேதி தனது வீட்டிலிருந்த தங்க நகைகளைச் சரிபார்த்த போது அதில், 207 பவுன் நகைகள் மற்றும் ரூ.50,000 காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மதுரகவியின் மனைவிக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைஅளிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவி(32) என்ற செவிலியர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
அவர்தான் வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி, அவரது நண்பர் ஜெகநாதனிடம்(34) கொடுத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தேவி மற்றும் ஜெகநாதனை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.34,000 மற்றும் 207 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.