

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவர் நேற்று தனது பேரன் சித்தார்த்துடன் மங்கலம்பேட்டைக்கு சென்று, அண்ணாதுரை (59) என்பவர் நடத்தி வரும் தேநீர் கடையில் தேநீர் கேட்டார்.
அப்போது குப்பன், கடையினுள் இருந்த தண்ணீர் குடுவையில் தண்ணீர் எடுத்து பருகியதாக தெரிகிறது. இதைக்கண்ட அண்ணாதுரை, உள்ளே வந்து எப்படி தண்ணீர் குடிப்பாய்? என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் லேசாக காயமடைந்த குப்பன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அண்ணாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.