

பழநி: பழநியில் அரசு மருத்துவரை கட்டிப் போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
பழநி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிபவர் உதயகுமார் (55). இவர் பழநி அண்ணா நகரில் வசித்து வருகிறார். கடந்த ஏப்.14-ம் தேதி அதிகாலை இவரது வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 3 பேர், வீட்டில் தனியாக இருந்த உதயகுமாரை கட்டிப் போட்டு பீரோவில் இருந்த நகைகள், பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து பழநி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸார் விசாரணையில், 64 பவுன் நகைகள், ரூ. 24 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக, பழநி பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.