Published : 13 Apr 2023 06:15 AM
Last Updated : 13 Apr 2023 06:15 AM

ராஜபாளையம் அருகே கோயிலுக்கு பூட்டு போட்டு ‘சீல்' வைத்தது யார்? - போலீஸார் விசாரணை

ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில்.(உள்படம்) மர்ம நபர்கள் பூட்டுப் போட்டு ‘சீல்' வைத்துள்ள பிரதான நுழைவாயில்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் ‘சீல்' வைத்தனர். ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராக்கப்பன்(55) என்பவர் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரியாக இருந்து வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றார். நேற்று காலை கோயிலைத் திறக்க வந்தபோது பிரதான நுழைவுவாயில் உட்பட நான்கு கதவுகளுக்கும் பூட்டுப்போட்டு `சீல்' வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து ராக்கப்பன் வருவாய், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அதிகாரிகள் தாங்கள் கோயிலுக்கு `சீல்' வைக்கவில்லை என தெரிவித்தனர். பின்னர் ராக்கப்பன் மற்றும் கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு வைக்கப்பட்ட `சீலை' அகற்றவும், `சீல்' வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மம்சாபுரம் போலீஸில் புகார் அளித்தனர்.

கோயிலை நிர்வகிக்க உரிமை கோரி ஒரு தரப்பினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் கோயிலுக்கு மர்ம நபர்கள் ‘சீல்' வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x