

திருப்பூர்: திருப்பூரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலையை சேர்ந்தவர் 59 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிச.2-ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) தவறாக நடக்க முயன்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியையிடம் இதனை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் போக்சோ வழக்கு பதிந்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நீதிபதி டி.பாலு இன்று தீர்ப்பு அளித்தார்.
அதில், மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் வரை சிறைத் தண்டனை விதித்து, ரூ.5 ஆயிரம் அபராதம் வழங்கவும் உத்தரவிட்டார். சிறுமியின் மறுவாழ்வுக்காக ரூ.2.5 லட்சம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜாரானார்.