

சென்னை: சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை, உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டுடிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்கம் விற்பனை, ரியல் எஸ்டேட், தங்க நகைக்கு கடன் வழங்குவது, தங்கசேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தையும் செய்து வந்தது.
இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.ஆனால், உறுதி அளித்தபடி அந்நிறுவனம் நடந்து கொள்ளவில்லை. இதையடுத்து முதலீட்டாளர்கள், சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சுமார் 2,400 கோடிவரை பணம் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் இயக்குநர்கள், நிர்வாகிகள், முகவர்கள் என அடுத்தடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுஒருபுறம் இருக்க ஆருத்ராநிறுவன மேலாண் இயக்குநர்களான சென்னை மேத்தா நகர் ராஜசேகர், விருதுநகர் மைக்கேல் ராஜ்,முகப்பேர் கிழக்கு உஷா ஆகியோர்வெளிநாடு தப்பினர். அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச போலீஸார் உதவியுடன் தலைமறைவாக உள்ளஅவர்களை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில்தலைமறைவாக இருந்து வந்தஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்களான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஷ் (31), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கூடுதல் இயக்குநர் மாலதி ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஹரிஷ், தமிழக பாஜக பிரிவில் விளையாட்டு, திறன் மேம்பாட்டுத்துறை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்திருந்தார் என்பதுகுறிப்பிட்டத்தக்கது.