

மும்பை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பை மாநகரில் ஒரு வீட்டில் அழுகிய நிலையில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணின் 23 வயது மகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் உடலை அந்த வீட்டில் இருந்த கப்போர்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் இருந்ததை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதோடு அவரது உடலின் பெரிய எலும்புகள் மற்றும் சில சதைப் பகுதிகள் இரும்புப் பெட்டி ஒன்றுக்குள் வைத்து தொட்டி ஒன்றில் போடப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் வீணா ஜெயின் என்றும், அவருக்கு வயது 55 என்றும் தெரிகிறது. அவரைக் காணவில்லை என அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். லால்பாக் பகுதியில் வீணா தனது மகள் ரிம்பிள் ஜெயின் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அதனால் போலீஸார் அந்த வீட்டுக்கு செவ்வாய் அன்று இரவு சென்றுள்ளனர்.
அந்த வீட்டில் அவர்கள் ரிம்பிள் இடம் சில மணி நேரம் விசாரித்துள்ளனர். தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்டபோது இந்த குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. போலீஸார் அவரது உடலை பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் ரிம்பிளை கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வீட்டில் வைத்து கொலை செய்யப்படும் கொடூர குற்றக் சம்பவங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் ஷ்ரத்தா எனும் பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது காதலன் அஃப்தாப் ஆமின் பூனவல்லா கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.