

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அடுத்தடுத்து 2 கோயில்களின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னகன்னாலப்பட்டி கிராமத்தில் பிரசித்திப்பெற்ற தேசத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடித்து கோயிலை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை கோயிலை திறக்க பூசாரி வந்தபோது கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த போது மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுன் எடையுள்ள தங்க சரடு, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு வெள்ளி குத்துவிளக்கு மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ரூ.15 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.
அதேபோல செம்மினி கொல்லிமேடு பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், அம்மன் கழுத்தில் அணிவித்திருந்த ஒரு பவுன் தங்க சரடு, வெள்ளி மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் வெண்கல பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வரு கின்றனர்.