

படப்பை: படப்பை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளிடம் செல்போன் செயலி மூலம் லஞ்சம் வங்கிய போலீஸார் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. இவருக்கும் உறவுக்காரப் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு மனைவியாக வரப்போகிற பெண்ணுடன், கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு படப்பை அருகே ஆரம்பாக்கம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த மணிமங்கலம் போலீஸார் இருவர் இவர்களை விசாரித்துள்ளனர்.
அப்போது தங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதையும் இருவரும் தனியாக பேச வேண்டும் என்பதற்காக வநதிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸார் அதை ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என இருவரையும் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் கிருஷ்ணனுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் செயலி மூலம் மணிமங்கலம் காவல்நிலைய முதல் நிலை காவலரான மணிபாரதி என்பவருக்கு ரூ.4 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் முதல் நிலை காவலர் மணிபாரதி, காவலர் அமிர்தராஜ் ஆகிய இருவர்தான் இளம் ஜோடிகளிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து காவலர்கள் இருவரையும் கைது செய்து, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.