

விழுப்புரம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஒரு வாரம் கடந்தும் குற்றவாளியை அடையாளம் காண முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அருகே 17 வயது மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும், அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த 25-ம் தேதி இரவு இருவரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு பைக்கில் சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், மாணவனை கத்தியால் சரமாரியாக குத்தி, கொலை செய்து விடுவேன் என மிரட்டினர். அப்போது 3 பேரில் ஒருவன் கத்தி முனையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னர் அவர்களின் 2 செல்போன், நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற விக்கிரவாண்டி போலீஸார் இருவரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து டிஐஜி பாண்டியன், எஸ்பி ஸ்ரீநாதா, டிஎஸ்பி பார்த்தீபன் மற்றும் விக்கிரவாண்டி போலீஸார் மாணவி மற்றும் மாணவனிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 8 தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், சம்பவம் நடந்த இடத்தில் நீண்ட நேரம் மொபைல் எண்ணை பயன்படுத்திய 18 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியும் பலனில்லை.
இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டே வந்துள்ளனர். அவர்கள் தங்களுடன் மொபைல் போன், கைக்கடிகாரம் என்ற எந்த எலக்ட்ரானிக் டிவைஸ், இருசக்கர வாகனம் இல்லாமல் வழக்கமான பாதையை பயன்படுத்தாமல் குறுக்கு வழியில் வந்து சென்றுள்ளனர். எவ்விதத்திலும் அவர்கள் சிக்காமல் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இதனால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறோம் என தங்களை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பாத காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, “குற்ற வாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் கைது செய்யப் படுவார்கள். சில க்ளூக்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து விஞ்ஞான ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.