

சென்னை: பணமோசடி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில், கடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகள் பெற்றவர் ஹரி நாடார். தொழில் அதிபரான இவர் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழில் அதிபர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 2021-ம் ஆண்டு திருநெல்வேலி போலீஸார், ரூ.1.50 கோடி மோசடி செய்துவிட்டதாக ஹரி நாடார் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு கடந்த 2022-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று தெரிவித்தனர்.இந்தத் தகவல் அவருக்கு நோட்டீஸ் மூலம் நேற்று தெரிவிக்கப்பட்டது. அவர் விரைவில் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்படுவார் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.