திருப்பத்தூர் | தாய் கண் முன்னே தந்தைக்கு கத்திக் குத்து - தப்பியோட முயன்ற மகன் கைது

திருப்பத்தூர் | தாய் கண் முன்னே தந்தைக்கு கத்திக் குத்து - தப்பியோட முயன்ற மகன் கைது
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (62), தையல் கலைஞர். இவரது மகன் வெற்றிச் செல்வன் (36). இவர், சிஏ முடித்து சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. இதனை விற்று அந்த பணத்தை தரவேண்டும் என வெற்றிச்செல்வன் தனது தந்தை ஆதிமூலத்திடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால், அந்த வீட்டை விற்க ஆதிமூலம் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை - மகன் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை வெற்றிச்செல்வன் தனது தந்தை ஆதிமூலம் நடத்தி வந்த தையல் கடைக்கு சென்று ஆதிமூலம், தாய் வெங்கடேஷ்வரி ஆகியோரிடம் வீட்டை விற்று பணத்தை தரவேண்டும். இல்லையென்றால் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கித் தரவேண்டும் என தகராறு செய்துள்ளார்.

அதற்கு, பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு 14 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயமடைந்த ஆதிமூலம் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான காவல் துறையினர் சென்னைக்கு தப்பியோட முயன்ற வெற்றிச்செல்வனை திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in