

ஈரோடு: ஈரோட்டில் சகோதரர்களைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவர்களது தாய் மாமா உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு முனிசிபல் காலனியைச் சேர்ந்த லோகநாதன் - மகேஸ்வரி தம்பதியின் மகன்கள் கவுதம் (30), கார்த்தி (26). கவுதமுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக்கு திருமணம் ஆகவில்லை. நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு பொருளாளராக கார்த்தி பதவி வகித்து வந்தார். சகோதரர்கள் இருவரும் இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
மகேஸ்வரியின் தம்பியான ஆறுமுகசாமிக்கும், கவுதம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 30-ம் தேதி இரவு ஆறுமுகசாமி (48) மற்றும் அவரது உறவினரான கவின் (24) ஆகியோர் இதுகுறித்து பேச வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கவுதம் மற்றும் கார்த்தியை ஆறுமுகசாமி கத்தியால் குத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸார், தலைமறைவாக இருந்த ஆறுமுகசாமி, கவினை கைது செய்தனர்.