

கரூர்: மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில், விவசாய கூலித் தொழிலாளிக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம் சோமூரைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(60). இவர், 2020, செப்.6-ம் தேதி மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியே வந்தவர்கள் இதைக் கண்டு, அர்ஜூனனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீஸார் அர்ஜூனனைக் கைது செய்தனர்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஏ.நசீமாபானு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி, அர்ஜூனனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.100 அபராதம், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.