தடையில்லா சான்றுக்கு ரூ.1.10 லட்சம்... மாநகராட்சி ஊழியர் கடத்தல் - மருத்துவமனை ஊழியர்கள் கைது

தடையில்லா சான்றுக்கு ரூ.1.10 லட்சம்... மாநகராட்சி ஊழியர் கடத்தல் - மருத்துவமனை ஊழியர்கள் கைது
Updated on
1 min read

மதுரை: தடையில்லா சான்றிதழ் வாங்கித் தருவதாக ரூ.1.10 லட்சம் வாங்கி ஏமாற்றிய, மதுரை மாநகராட்சி ஊழியர் கடத்தப்பட்டார். அவரை உசிலம்பட்டியில் மீட்ட போலீஸார், அவரை கடத்தியதாக தனியார் மருத்துவமனை ஊழியர்களை கைது செய்தனர்.

மதுரை பிபிசாவடியைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(34). மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகிறார். எஸ்எஸ்.காலனியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தடையில்லா சான்றிதழ் பெற மருத்துவமனை ஊழியர்கள் 2020-ல் சரண்ராஜை அணுகினர்.

அவர், சான்றிதழ் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.10 லட்சம் பெற்றார். ஆனால் சான்றிதழ் வாங்கிக் கொடுக்காமல் தாமதம் செய்தார். இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்களான உசிலம்பட்டி அருகில் உள்ள பாப்பாபட்டியைச் சேர்ந்த அருண்பாண்டியன்(23), கவுண்டன்பட்டி கண்ணதாசன்(30) ஆகியோர் சரண்ராஜை பெரியார் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் சந்தித்து, சான்றிதழ் குறித்துக் கேட்டுள்ளனர்.

அதற்கான ஆவணங்கள் தயாராக இருப்பதாகவும், விரைவில் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி சரண்ராஜை அவர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சரண்ராஜ் குடும்பத்தினர் திடீர்நகர் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரித்தபோது, உசிலம்பட்டி பேருந்து நிலையத்துக்கு பணத்துடன் வந்தால், சரண்ராஜை விடுவிப்பதாக அவரது மனைவிக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் மற்றும் சரண்ராஜ் மனைவி உசிலம்பட்டிக்கு சென்று அவரை மீட்டனர். மேலும் மாநகராட்சி ஊழியரை கடத்தியதாக அருண் பாண்டியன், கண்ணதாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மருத்துவர் சந்திரனிடம் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in