Published : 14 Jan 2023 04:05 PM
Last Updated : 14 Jan 2023 04:05 PM

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 5 பேர் கைது

சென்னை: காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும், மாணவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, அந்த வழியாக மது அருந்திவிட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பல், மாணவி மற்றும் மாணவரை கத்தியை காட்டி மிரட்டியதுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியது.

இது குறித்து காவல் துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த 5 பேர், அந்த மாணவியை கத்திமுனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் புகார் அளிக்காதபோதிலும், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமதாஸ் வலியுறுத்தல்: இதனிடையே, காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காஞ்சிபுரத்தை அடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர், அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்கு தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள நான்காவது கூட்டுப் பாலியல் வன்கொடுமை இதுவாகும். மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தடையின்றி கிடைப்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத்தர வேண்டும். போதைப்பொருட்கள் ஒழிப்பு, தீவிர கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் இனி எங்கும் பாலியல் வன்கொடுமை நடக்காத நிலையை தமிழக காவல் துறை ஏற்படுத்த வேண்டும்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும்!(1/4)

— Dr S RAMADOSS (@drramadoss) January 14, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x