ரூ.5.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்: விமான நிலையத்தில் உகாண்டா பெண் கைது

ரூ.5.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்: விமான நிலையத்தில் உகாண்டா பெண் கைது
Updated on
1 min read

சென்னை: எத்தியோப்பியா நாட்டிலிருந்து அதிக அளவு போதைப்பொருள் சென்னைக்கு கடத்திவர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. எத்தியோப்பியா தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 1 கிலோ 542 கிராம் மெத்தகுவலோன் போதைப்பொருள் மற்றும் 644 கிராம் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.5.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in