சென்னை | போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலம் அபகரித்த தந்தை - மகன் கைது

சென்னை | போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலம் அபகரித்த தந்தை - மகன் கைது
Updated on
1 min read

சென்னை: போலி வாரிசு சான்றிதழ் மூலம் ரூ.80 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்ததாக தந்தை, மகனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த படப்பையை சேர்ந்தவர் மோகன். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘கோவூரைச் சேர்ந்த செல்வம், அவரது மகன் மகேஷ் ஆகியோர் போலியான வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, எனக்கு சொந்தமாக விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.80 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்துவிட்டனர். எனவே, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டுத்தர வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் அனந்தராமன், ஆய்வாளர் ஞானசித்ரா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், நில மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செல்வம், அவரது மகன் மகேஷ் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in