Published : 19 Nov 2022 06:12 AM
Last Updated : 19 Nov 2022 06:12 AM

கோவை | ரூ.110 கோடி மோசடி புகாரில் திரைப்பட இயக்குநரின் கணவர் கைது

கோவை: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்தவர் சஜீவ்கருண் (35). இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்றும், ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சமாக பணம் இரட்டிப்பு செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பி ஏராளமானோர் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த 300 பேரும் இவரிடம் முதலீடு செய்தனர்.

ஆனால், அறிவித்தபடி வட்டியை கொடுக்காமல் முதலீட்டு பணத்தையும் திருப்பி அளிக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி சஜீவ்கருணை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், மோசடி பணத்தில் சஜீவ் கருண் கேரளாவில் பல்வேறு குறும்படங்கள் தயாரித்து, அதில் சிலவற்றில் நடித்துள்ளதும், பல இடங்களில் நிலம் மற்றும் ஹோட்டல்கள் வாங்கியதும் தெரியவந்தது.

போலீஸார் கூறும்போது,‘‘சஜீவ் தருண் பண இரட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி ரூ.110 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவரது மனைவி சினிமா இயக்குநராக உள்ளார். அவரது இயக்கத்தில் ஒரு படம் தயாரித்துள்ளார். அந்த படத்தை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். சஜீவ் கருண் மோசடி பணத்தில் கேரளாவில் பல்வேறு இடங்களில் எஸ்டேட், சொகுசு பங்களாக்கள் வாங்கியுள்ளார். பொள்ளாச்சியில் 3 ஏக்கர் நிலத்துடன் பண்ணை வீடும் வாங்கி உள்ளார். கேரளாவில் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x