“என் மகளை கொலை செய்தவரை தூக்கில் போடுங்கள்...” - ஷ்ரித்தாவின் தந்தை கண்ணீர் பேட்டி

“என் மகளை கொலை செய்தவரை தூக்கில் போடுங்கள்...” - ஷ்ரித்தாவின் தந்தை கண்ணீர் பேட்டி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் படுகொலையான ஷ்ரித்தாவின் தந்தை அளித்த பேட்டியில், "என் மகளின் படுகொலையின் பின்னணியில் லவ் ஜிஹாத் பின்னணி இருப்பதாக சந்தேகப்படுகிறேன். டெல்லி போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்த வழக்கை சரியான திசையில் விசாரிப்பார்கள் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷிரத்தா (26). இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ‘கால்சென்டரில்' பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.

வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதை ஷிரத்தாவின் பெற்றோர் விரும்பவில்லை. மகளின் காதலுக்கு அவர்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலனுக்காக பெற்றோரை உதறித் தள்ளிய ஷிரத்தா, மும்பையின் வாசி பகுதியில் அஃப்தாப் உடன் தனி வீட்டில் வாழத் தொடங்கினார். மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேது ஷ்ரித்தாவை கொடூரமாக கொலை செய்த காதலன் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 2 மணிக்கு வெளியில் சென்ற அவர், நாய்களுக்கு ஒவ்வொரு துண்டாக வீசி உடல் பாகங்களை அழித்துள்ளார். இவை அனைத்தும் தற்போது அம்பலமாகி பெரும் அச்சத்தை கடத்தியுள்ளது.

இந்நிலையில், மகளின் கொடூரக் கொலைக்குப் பின்னால் லவ் ஜிஹாத் இருப்பதாகக் கூறியுள்ள தந்தை தன் மகளை கொடூரமாக கொலை செய்த இளைஞரை தூக்கிலிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஷ்ரித்தாவின் நண்பர் ஒருவர் அளித்தப் பேட்டியில், "ஷ்ரித்தா மிகவும் மகிழ்ச்சியான பெண். எப்போதும் உற்சாகமாக இருப்பார். அவருக்கு ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக வேண்டும் என்று விருப்பம். ஆனால் அஃப்தாபை சந்தித்த பின்னர் அவர் உற்சாகமற்றவராக மாறினார். நான் ஒருமுறை அஃப்தாபை நேரில் சந்தித்திருக்கிறேன். ஆனால் எனக்கு அப்போது அவர் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. அவர் மிகவும் இயல்பாகவே இருந்தார். ஆனால் இப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை போலீஸார் ஆராய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in