

கிருஷ்ணகிரி: லண்டன் நிறுவனத்திற்கு மருந்து பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் பொருள்களை வாங்கி தந்தால் இரட்டிப்பு லாபம் வழங்குவதாக கூறி, ஓசூர் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.2.16 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலூர் ரோடு பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (51). இவர் ஓசூரில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது தொழில் முன்னேற்றத்திற்காக, நிறுவனத்தின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் இணையதளம் மூலம் பல்வேறு செயலிகளில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மோகன்ராஜ் இ-மெயிலுக்கு லண்டன் ஓசோமெடிக்பார்ம் என்கிற மருந்து கம்பெனியில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதில், தாங்கள் லண்டனில் மிகப்பெரிய மருந்து கம்பெனி நடத்தி வருவதாகவும், தங்களுக்கு செசிநெல்கோ எனப்படும் விதைகள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு தேவைப்படுவதாகவும், அது இந்தியாவில் உள்ள வனோரோமியா பார்ம்ஸ் என்கிற நிறுவனத்தில் கிடைப்பதாகவும், நீங்கள் கொள்முதல் செய்து கொடுத்தால் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பிய மோகன்ராஜ், மெயிலில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது 13 வங்கி கணக்குகளில் பேசியவர்களும், விதைகளை நீங்கள் கொள்முதல் செய்து அனுப்பினால், உங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவித்து, மாதிரி விதைகளை அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகன்ராஜ், லண்டன் நிறுவனத்தில் உள்ளவர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு விதைகளை காண்பித்துள்ளார்.
விதைகள் தரமாக இருப்பதாகவும், மொத்தமாக அவர்களிடம் இருக்கும் விதைகளை வாங்கி விடவும் என லண்டன் மருந்து கம்பெனியினர் தெரிவித்தனர். தொடர்ந்து மோகன்ராஜ், வனோரோமியா பார்ம்ஸ் அனுப்பிய, 13 வங்கி கணக்குகளில் ரூ 2 கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 500 அனுப்பினார். அதன் பின்னர், லண்டன் மருந்து கம்பெனியினரும், வனோரோமியா பார்ம்ஸ் கம்பெனியினரும் தொடர்புக் கொள்ளவில்லை. விதைகளும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்ராஜ், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.