கூவத்தூர் அடுத்த முகையூரில் சொத்து தகராறில் கொலை; உறவினர்கள் மறியல்: குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

கூவத்தூர் அடுத்த முகையூரில் சொத்து தகராறில் கொலை; உறவினர்கள் மறியல்: குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை
Updated on
1 min read

கல்பாக்கம்: கூவத்தூர் அடுத்த முகையூரில் குடும்ப சொத்து தகராறில் நடந்தகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, ஈசிஆரில் நேற்று உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கூவத்தூர் அடுத்த முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (55). இவரது சகோதரர் பத்மநாபன் (52). இந்நிலையில், சகோதரர்களிடையே பூர்வீகச் சொத்து தொடர்பாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் இதனால், இரு குடும்பத்தினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சகோதரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த பத்மநாபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே, ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கூவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி உயிரிழந்த நபரின் உறவினர்கள், முகையூர் அருகே ஈசிஆரில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். அப்போது இந்தக்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், ஈசிஆர் சாலையில் சுமார் அரைமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in