எஸ்.டி.சாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்தவர் உடல் தகனம்: 1 மணி நேரத்தில் நடந்து முடிந்தது

வேல்முருகன்
வேல்முருகன்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தனது மகனுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனின் உடல் ஒரு மணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு பழங்குடியினர் சாதிச் சான்று கேட்டு பல ஆண்டுகளாக மனு செய்து வந்தார். ஆனாலும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகதத்தில் கடந்த 11-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும், இவர் குடும்பத்தினர் யாருக்காவது வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மற்றும் பூக்கடை காவல் துணை ஆணையர் அல்பர் ஜான், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தினங்களுக்குப் பிறகு வேல்முருகனின் உடல்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சொந்த ஊரானசிறுமாத்தூர் இடுகாட்டில் ஒரு மணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in