

மதுராந்தகம்: வேடந்தாங்கலை அடுத்த கொலம்பாக்கம் கிராமத்தில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை கடை அருகே, படாளம் போலீஸார் பெண் சடலத்தை மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கலை அடுத்த கொலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மனைவி காளியம்மாள்(48). இவர், கடந்த 10-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மகள் ஜெயா தாயாரை காணவில்லை என படாளம் போலீஸில் கடந்த 11-ம் தேதி புகார் அளித்தார். இதன்பேரில், வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொலம்பாக்கத்தில் சிவக்குமார் என்பவரின் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை அருகே, பெண் ஒருவர் இறந்து கிடப்பது தெரிந்தது. தகவல் அறிந்த படாளம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் காளியம்மாள் என்பது தெரிந்தது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.