

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார். முத்துசாமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பாப்பையன் மனைவி காளீஸ்வரி(45) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. காளீஸ்வரிக்கு மகன், மகள் உள்ளனர்.
முத்துசாமிக்கும், காளீஸ்வரிக்கும் கடந்து சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துச்சாமிக்கு சொந்தமான செங்கல் சூளையில் தனியாக இருந்தபோது, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துச்சாமி கட்டையால் தாக்கியதில் காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றவர்கள் காளீஸ்வரி இறந்து கிடந்ததை பார்த்து சேத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். காளீஸ்வரியின் உடலை போலீஸார் மீட்டனர். சம்பவ இடத்தில் ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி விசாரணை நடத்தினார். இதற்கிடையே தப்பி ஓடிய முத்துச்சாமியை போலீஸார் கைது செய்தனர்.