கிருஷ்ணகிரி | அரசு மருத்துவரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது

கிருஷ்ணகிரி | அரசு மருத்துவரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் காயமடைந்த வருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவரை தாக்கிய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (22). அதேபகுதியைச் சேர்ந்த, அவரது நண்பர்கள் தனுஷ்(எ) சுப்பிரமணி (20), நந்தகுமார் (24), காதர் பாட்ஷா. இவர்கள் மூவரும் மது அருந்துவதற்காக மணிகண்டனிடம் பணம் கேட்டுள்ளனர்.

ஆனால், மணிகண்டன் பணம் தர மறுத்துள்ளார். எனவே, மூவரும் இணைந்து மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மணிகண்டன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

மது அருந்திவிட்டு அங்கு சென்ற தனுஷ், நந்தகுமார் ஆகிய இருவரும், அவசர சிகிச்சைப் பிரிவில் மணிகண்டனுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் முகமது இஸ்மாயிலிடம் தகராறு செய்துள்ளனர்.

மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கூறி தகராறு செய்த இருவரும் மருத்துவரை தாக்கியதுடன், அங்கிருந்த மேசை, கதவு ஆகியவற்றையும் உடைத்துள்ளனர்.

இது தொடர்பாக முகமது இஸ்மாயில், மணிகண்டன் ஆகியோர் கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in