கரூர் அருகே லாரி மோதி விபத்து: வழக்கறிஞர் உள்பட இருவர் பலி

விபத்து ஏற்படுத்திய லாரி
விபத்து ஏற்படுத்திய லாரி
Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கிரானைட் கல் ஏற்றிச்சென்ற ட்ரெய்லர் லாரி மோதியதில் 2 சக்கர வாகனத்தில் (ஸ்கூட்டர்) சென்ற வழக்கறிஞர், மற்றும் அவரது மாமியார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவர் மகன் கனகராஜ் (34) வழக்கறிஞர். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூர் ராசிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கனகராஜின் மாமியரான சுசீலா (50) பாலவிடுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மருமகன் கனகராஜுடன் இரு சக்கர வாகனத்தில் காளியப்பனூருக்கு நேற்றிரவு சென்றுள்ளார்.

வெள்ளியணை அருகேயுள்ள ஒத்தையூர் அருகே செல்லும்போது தோகைமலையிலிருந்து ஓசூருக்கு கிரானைட் கல் ஏற்றிச்சென்ற ட்ரெய்லர் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கனகராஜின் இரு சக்கர வாகனத்தின் (ஸ்கூட்டர்) மீது மோதியதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய கனகராஜ், சுசீலா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கனகராஜ், சுசீலா சடலங்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in