‘பெங்களூருவில் நடிகை மீரா மிதுன்; விரைவில் கைது’ - நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நடிகை மீரா மிதுன் | கோப்புப் படம்
நடிகை மீரா மிதுன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலையான இருவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், "நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் பெங்களூரில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in