Published : 08 Sep 2022 04:45 AM
Last Updated : 08 Sep 2022 04:45 AM

ரூ.25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனை? - வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த சட்டக்கல்லூரி மாணவர் கைது

கைதான பார்த்திபன்.

வேலூர்

வேலூரில் ரூ.25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனை செய் யப்படும் என வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த சட்டக்கல்லூரி மாணவரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (24). இவர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இதனால், வேலூர் சார்பனாமேடு பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவர், தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ‘புலிகுட்டி விற்பனைக்கு உள்ளது, விலை 25 லட்சம் ரூபாய்’ என்றும், புலிக்குட்டியின் புகைப் படங்களுடன் ‘முற்றிலும் இது உண்மையான தகவல்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்த ரகசிய தகவல் வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்தது. அதன்பேரில், வேலூர் வனச்சரக அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வனக்காவலர்கள் சார்பனாமேடு பகுதியில் வசித்து வந்த பார்த்திபனை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தமிழ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், அவரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரில் கைதான பார்த்திபன் இடைத்தரகராக செயல்பட்டவர் என்றும், சென்னையைச் சேர்ந்த தமிழ் என்பவர்தான் முக்கியமான நபர் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் புலிக்குட்டியை எங்காவது மறைத்து வைத்துள்ளார்களா? என்றும், இல்லை மோசடி செய்வதற்காக இப்படி கூறி வருகிறார்களா? என்றும் வனத் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x