Published : 04 Sep 2022 04:55 AM
Last Updated : 04 Sep 2022 04:55 AM

நாட்றாம்பள்ளி | தனியாக வசித்து வந்த மூதாட்டியை தாக்கி கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

நாட்றாம்பள்ளி அடுத்த மேல்மல்லப்பள்ளியில் மூதாட்டி அமராவதியை முகமூடி அணிந்த மர்ம நபர் தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

திருப்பத்தூர்

நாட்றாம்பள்ளி அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நள்ளிரவில் தாக்கிய முகமூடி அணிந்த மர்ம நபர் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது குறித்தும், ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் முகத்தில் மயக்க தண்ணீரை தெளித்து 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச்சென்ற பெண் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த மேல்மல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி என்பவரின் மனைவி அமராவதி (70). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் ஒரே மகன் தேவராஜ் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால், அமராவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே வந்த அமராவதியை முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்கியுள்ளார். அவரது கை, கால்கள், வாயை பொத்தி துணியால் கட்டி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கிடத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், விவசாய நிலத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அமராவதியை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த சிலர் நேற்று காலை பார்த்துள்ளனர்.

அவரது கட்டுகளை அவிழ்த்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 பவுன் தங்க நகைகளை நள்ளிரவு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் நாட்றாம்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், முகமூடி அணிந்த நபர் தாக்கியதில் அமராவதியின் வலது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டிருந்ததால் நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் மாரியம்மன் கோயில் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் மனைவி கமலம்மாள் (80). இவர், ஜோலார்பேட்டையில் உள்ள வங்கிக்கு நேற்று சென்று கணவரின் ஓய்வூதிய பணத்தை பெறறுக்கொண்டு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் அருகே நின்றிருந்த காரில் இருந்து இறங்கி வந்த பெண் ஒருவர், உறவினர் என கூறி கமலம்மாளின் கைகளில் ரூ.400 பணத்தை திணித்துவிட்டு செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால், அந்த பெண் உறவினர் என்று நம்பிய கமலம்மாள் அவரை வீட்டுக்குள் வருமாறு கூறியுள்ளார். அவரும் உள்ளே சென்றதும் திடீரென மறைத்து வைத்திருந்த தண்ணீரை எடுத்து கமலம்மாள் முகத்தில்அந்த பெண் வீசியுள்ளார்.

இதில், மயங்கிய கமலா சிறிது நேரம் கழித்து விழித்துப் பார்த்தபோது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலிக்கு பதிலாக கவரிங் நகை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த, தகவலின்பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பட்டப்பகலில் மூதாட்டியை ஏமாற்றி நகையை பறித்துச்சென்ற பெண் காரில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காரின் பதிவெண் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விவசாய நிலத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அமராவதியை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த சிலர் நேற்று காலை பார்த்துள்ளனர். அவரது கட்டுகளை அவிழ்த்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x