மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை: கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை: கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

கோவை: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை அழகேசன் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் ராஜாராம் (54). அவரது மனைவி உஷாராணி. இவர்கள், சாய்பாபாகாலனியில் வசித்து வந்தனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ராஜாராம், வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதோடு, தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உஷாராணியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2009 ஜூன் 18-ம் தேதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராஜாராம், உஷாராணியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் சாணிப்பவுடரை குடித்துள்ளார். தகவல் அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உஷாராணி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபாகாலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், உஷாராணியை தற்கொலைக்கு தூண்டிய ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஜிஷா ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in