ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கும்பலை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் தமிழகம் மட்டும்அல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி, பி.விகாலனியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (54). இவர், திருவொற்றியூரில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணி புரிகிறார். இந்நிலையில் இவர் எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள ஓர் ஏடிஎம் மையத்தில் அண்மையில் பணம் எடுக்கச்சென்றார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை செலுத்தி அவரால் பணம் எடுக்க முடியவில்லை.

அங்கிருந்த சிலர், புண்ணிய மூர்த்திக்கு உதவுவதுபோல், கார்டின் ரகசிய எண்ணை கேட்டு, பணம் எடுக்க முயற்சித்தனர். இருப்பினும் ஏடிஎம் இயந்திரத்தில் அவர்களால் பணம் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அங்கிருந்து புண்ணியமூர்த்தி, வீட்டுக்குத் திரும்பி சென்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்துரூ.1.15 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனுக்குகுறுஞ்செய்தி வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர், எம்கேபி நகர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் எம்கேபி நகர்பகுதியில் கூலி வேலை செய்யும்பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாகுலி குமார் (29), மனோஜ்குமார் (28), அஜய்குமார் (26) ஆகிய 3 பேரும்தான் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ரகசிய எண்களை பயன்படுத்தி..

இதையடுத்து போலீஸார், 3 பேரையும் நேற்று கைது செய்தனர். விசாரணையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முடியாமல் இருந்த புண்ணியமூர்த்தியிடம் பணம் எடுத்து தருவதாக மூவரும், அவரதுஏடிஎம் கார்டை வாங்கியிருப்பதும், பின்னர் தங்களிடம் இருந்த போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சிப்பதுபோல நடித்ததும், புண்ணியமூர்த்தி பணம் எடுக்க முடியாமல் வீட்டுக்கு புறப்பட்டதும், அவரிடம் இருந்த அபகரித்த ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் செலுத்தி அவர் ஏற்கெனவே கூறிய ரகசிய எண்களைப் பயன்படுத்தி பணத்தை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இவர்கள் சென்னை மட்டும் அல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் கைவரிசை காட்டியுள்ளதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in