திண்டுக்கல் | சுவாமி சிலைகளைத் திருடி ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற 4 பேர் கைது

திண்டுக்கல் | சுவாமி சிலைகளைத் திருடி ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற 4 பேர் கைது
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திருடிய 5 சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற 4 பேரை தென்மண்டல சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பகுதியிலுள்ள பழமையான கோயிலில் சுவாமி சிலைகளை திருடிய கும்பல் ஒன்று, அந்த சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சிப்பதாக தென்மண்டல சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், தென்மண்டல சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் ஆய்வாளர் ஷமிம் பானு, எஸ்ஐக்கள் ராஜேஷ், பாண்டிராஜன், சிறப்பு எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்தனகுமார் அடங்கிய தனிப்படையினர் சுவாமி சிலைகளை விற்க முயன்றவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், சிலைகளை விற்க முயன்ற புரோக்கர்களை கண்டறிந்தனர். அவர்களிடம் சிலைகளை வாங்குவது போன்று நடித்து தனிப்படையினர் பேசினர். சிலைகளுடன் அவர்களை திண்டுக்கல் - பழனி ரோட்டுக்கு கடந்த 2 நாளுக்கு முன்பு வரவழைத்து சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், முள்ளிபாடியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் யோவேல் பிரபாகரன் (31) என்பவர் தனது கூட்டாளிகளான ஈஸ்வரன், குமாருடன் சேர்ந்து 2021ம் ஆண்டு மே மாதம் திண்டுக்கல், தென்னம்பட்டி அருகில் மலையிலுள்ள ஆதிநாத பெருமாள், ரெங்க நாயகியம்மன் கோயிலிலுள்ள பழமையான சிலைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, அங்கு சென்ற அவர்கள் கோயிலில் இருந்து செயலர் சண்முகசுந்தரம், பூசாரிகள் பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரை கத்திமுனையில் மிரட்டி, தனி அறையில் பூட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதியம்மான் உலோக சிலைகளைக் கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது.

இது தொடர்பாக பிரபாகரன் (31), புரோக்கர்கள் திண்டுக்கல் ஆர்எம் காலனி ராமன் மகன் இளவரசன் (38), திண்டுக்கல் கிருஷ்ணாபுரம் கணபதி மகன் பால்ராஜ் (43), பிள்ளையார் பாளையம் முரளி மகன் தினேஷ்குமார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகளைக் கைப்பற்றினர். சிலைகள் திருடுபோன கோயில் சங்க காலத்து பழமையான கோயில் எனத் தெரிந்தது. மேலும், தலைமறைவாக இருக்கும் ஈஸ்வரன், குமாரை தேடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in