Published : 07 Aug 2022 04:40 AM
Last Updated : 07 Aug 2022 04:40 AM

ராமநாதபுரம் | மனைவியை தாக்கிய போலீஸ்காரர் கைது; தற்காலிக பணி நீக்கம்

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மனைவியைத் தாக்கி கொடுமைப் படுத்திய, மதுரை பட்டாலியன் போலீஸ்காரரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து பட்டாலியன் தளவாய் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத் துார் அருகே கோடரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் கனகராஜ் (33). இவர் 2016-ல் போலீஸ் பணியில் சேர்ந்து மணிமுத்தாறு பட்டாலியனில் பணி யாற்றினார்.

அப்போது ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸில் தலைமைக் காவலராக பணியாற்றும் முருக வள்ளி(33) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், இரண்டரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

ஆன்லைன் ரம்மி

கனகராஜ் தற்போது மதுரை 6-வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் இழந்த கனகராஜ் மதுவுக்கு அடிமையாகி மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்தனர். அதனால் முருகவள்ளி விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், விடுப்பில் வந்த கனகராஜ், ஆகஸ்ட் 2-ல் ராமநாதபுரத்தில் மதுரை சாலையில் உள்ள பள்ளியில் படிக்கும் மகளை பார்க்கச் சென்றார். அப்போது, அங்கு மனைவி முருகவள்ளியுடன் தகராறு செய்து, அவரைத் தாக்கி நகையை பறித்தார்.

இதுகுறித்து முருகவள்ளி கொடுத்த புகாரில் ராமநாதபுரம் நகர் போலீஸார் கனகராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

அதனையடுத்து கனகராஜ் தன்னை முருகவள்ளி மற்றும் அவரது தந்தை தாக்கியதாக, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்தார். அவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மதுரை 6-வது பட்டாலியன் தளவாய் அவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x