

நீலகிரி: உதகை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இளம் பெண் மாயமான விவகாரத்தில் தகவல் அறிந்தவர்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் விசாகா குழுவில் புகார் அளிக்கலாம் என டீன் மனோகரி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கடைநிலை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றி வந்த தர்ஷனா என்ற பெண், தன்னுடன் சிலமாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பெண் ஒருவரை காணவில்லை எனவும், மருத்துவக் கல்லூரி ஒப்பந்த பணியாளர்கள் தன்னை தாக்கியதாகவும் உதகை ஜி.1 காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘உதகை அருகேயுள்ள கல்லட்டி பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். மே மாதம் 15-ம் தேதியன்று எனக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதே போல் அந்தப் பெண்ணுக்கும் இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் ஒரே இடத்தில் பணி செய்து கொண்டிருந்த நிலையில், என்னை ஒரு வேலைக்காக அருகில் உள்ள சேட் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பணியை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, இரவுப் பணி செய்ய வந்த அந்த பெண் அங்கு இல்லை. அன்றுதான் அந்த பெண்ணை நான் கடைசியாக பார்த்தேன். அதன் பிறகு மருத்துவமனையில் பார்க்கவேயில்லை.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று பணிக்கு வந்த என்னிடம், தனியார் ஒப்பந்த நிறுவனத்தைசேர்ந்த மேற்பார்வையாளர் உள்ளிட்ட சிலர், `யார் வந்து இது குறித்து கேட்டாலும், விசாரித்தாலும் வெளியில் சொல்லக் கூடாது' என மிரட்டிஎன்னைத் தாக்கினர். இதனால், அச்சமடைந்த நான் சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை. எனவே இந்தப் பிரச்சினை குறித்து விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து உதகை மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. மகளிர் காவல்துறையினர் கூறும்போது, "இளம்பெண் அளித்திருக்கும் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உள்ளுக்குள் பாலியல் புகார்கள் இருப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகம் மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
இந்நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இளம் பெண் மாயமான விவகாரத்தில், இளம் பெண் குறித்து தகவல் அறிந்தவர்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் விசாகா குழுவில் புகார் அளிக்கலாம் என டீன் மனோகரி தெரிவித்துள்ளார்.