சேலம் | அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மேற்கு வங்க இளைஞர் கைது

சேலம் | அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மேற்கு வங்க இளைஞர் கைது
Updated on
1 min read

சேலம்: அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, சேலத்தில் பதுங்கியிருந்த மேற்கு வங்க இளைஞரை கர்நாடகா போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு, திலக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்-காய்தா பயங்கரவாத இயக்குதுடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24-ம் தேதி இரவு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அவரை தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர் பற்றிய தகவல் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலிம் முல்லா (20) என்பவர் சேலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரா தலைமையிலான போலீஸார் சேலம் வந்தனர். சேலம் கிச்சிப்பாளையம் குட்டைக்காடு என்ற இடத்தில் உள்ள கார்மென்ட்ஸுக்கு சென்ற போலீஸார், விசாரணை நடத்தினர்.

அந்த நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த எட்டு பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பணியாற்றுவதாக தெரியவந்தது. இவர்கள் மூன்று வாரங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளனர். அதில் அப்துல் அலிம் முல்லா என்பவர் அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருப்பவர் என்பது தெரியவந்தது.

அப்துல் அலி முல்லாவை கர்நாடக போலீஸார் கைது செய்து, விசாரணைக்கு பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in