

நகைக்காக 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் மூனாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மகள் நவநீதப்பிரியா (9). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3.9.2007-ல் நவநீதப் பிரியா, அவரது அண்ணன் நவீன்குமாருடன் பள்ளிக்குச் சென்றார். மாலையில் நவீன்குமார் மட்டும் வீடு திரும்பினார். நவநீதப் பிரியா வீடு திரும்பவில்லை. மறுநாள் தண்ணீர் தொட்டியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியைக் கொலை செய்து நகைகளைத் திருடியதாக அதே ஊரைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற சுந்தர பாண்டியம்மாளை தேவாரம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் பாண்டியம்மாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 21.7.2010-ல் தீர்ப்பளித்தது.
இதை ரத்து செய்யக் கோரி பாண்டியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இறந்த சிறுமியின் சீருடைகள் மனுதாரரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். ஆனால், இறந்த உடலில் சீருடை இருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. சிறுமி அணிந்திருந்த நகைகள் மனுதாரர் வீட்டில் மீட்கப்பட வில்லை. சிறுமி சடலமாக கிடந்த தண்ணீர் தொட்டி அருகே ஊர் மக்கள் குளிப்பது வழக்கம்.
இதனால் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது மனு தாரர் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்ததை வைத்து, அவர் தான் கொலை செய்தார் என்ற முடிவுக்கு வர முடியாது. இவ்வாறு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.