பூஜை செய்வதாகக் கூறி 70 பவுன் நகைகள் பறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி சாமியார் கைது

பூஜை செய்வதாகக் கூறி 70 பவுன் நகைகள் பறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி சாமியார் கைது
Updated on
1 min read

சிறப்பு பூஜை செய்வதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றி 70 பவுன் நகைகளை பறித்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளிம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமாயாள் (42). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கெட்டில் காய்கறிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது கணவர் பாலமுருகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அப்பகுதியில் குறி சொல்லும் பழனிகுமார் என்பவரிடம் விபூதி வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர் வியாபாரம் நன்றாக நடப்பதற்காக, சிறப்பு பூஜை நடத்த வேண்டும் எனக்கூறி, தங்கமாயாளிடம் 26 பவுன் நகைகளை பழனிக்குமார் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வாங்கி உள்ளனர்.

இந்நிலையில், நகைகளை திருப்பித்தராமல் பழனிகுமார் ஏமாற்றி உள்ளார்.

மேலும் பழனிகுமார் இதேபோல் ராம்குமார், ராஜலட்சுமி ஆகியோரிடம் தலா 12 பவுன் நகைகளையும், ராமேஸ்வரன் என்பவரிடம் 6 பவுன் நகைகளையும், கவுதம் என்பவரிடம் 16 பவுன் நகைகள் என 70 பவுன் நகைகளை பூஜை செய்வதாகக் கூறி ஏமாற்றி அபகரித்தது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து பழனிக்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in