Last Updated : 10 Jul, 2022 06:07 PM

 

Published : 10 Jul 2022 06:07 PM
Last Updated : 10 Jul 2022 06:07 PM

புதுச்சேரியில் போலி லோன் செயலிகள் மூலம் ஆபாச படம் வெளியிட்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை

புதுச்சேரி: போலி லோன் ஆப் மூலம் 20 பேரிடம் மோசடியில் ஈடுபட்டதோடு, அவர்களின் ஆபாச படங்களை வெளியிட்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (24). பிஎஸ்சி பாரன்ஸிக் படித்து வருகிறார். இவர் லோன் ஆப் மூலம் ரூ.70 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் திடீரென இவரது செல்போனுக்கு அவர் வாங்கிய லோன் ஆப் மூலமாக மார்பிங் செய்யப்பட்ட அவரது நிர்வாண படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிக பணம் தராவிட்டால் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பாலாஜி இது குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனியர் எஸ்பி சந்தோஷ் மீனா, எஸ்பி சுபம் சுந்தர் கோஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களிடம் நிர்வாண படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஏற்கனவே சைபர் கிரைம் போலீஸில் புகார்களை அளித்திருந்தனர். இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மனோஜ் கூறும்போது, ''போலியான லோன் ஆப் மூலம் எளிதாக லோன் வழங்கப்படுகிறது. சுலபமாக லோன் கிடைப்பதால் மக்களும், இதுபோன்ற போலி ஆப்களை நம்பி பணத்தை இழக்கின்றனர்.

குறிப்பாக ரூ.5 ஆயிரம் கடன் வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக ரூ.10 ஆயிரம் வரை பணம் பறிக்கின்றனர். தொடர்ந்து அதிக பணம் கேட்கின்றனர். கொடுக்காவிட்டால் ஆபாசமாக படங்களை மார்பிங் செய்து அனுப்பி மிட்டுகின்றனர். பலரும் பயந்து பணத்தை கொடுத்துவிடுகின்றனர். இதுபோல் பலரிடம் மோசடி நடைபெற்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 63 போலி லோன் ஆப்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இவை பெரும்பாலும் வெளிநாட்டு ஆப்களாகும். அவற்றை இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x