முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் என்ற ஸ்ரீதர் ராமசாமி (45). இவர் முகப்பேரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கரோனா பொது முடக்கம் அமலில் இருந்தபோது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களை ஆசிரியர்கள் பெற்று வைத்திருந்தனர்.

அதன்படி, ஸ்ரீதரும் தான் வகுப்பு எடுத்த 11, 12-ம் வகுப்பு மாணவிகளின் தொடர்பு எண்கள் அனைத்தையும் அவரது செல்போனில் சேமித்து வைத்திருந்தார். பின்னர், மாணவிகளுக்கு தவறான எண்ணத்துடன் வாட்ஸ்-அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பியதாகவும், ஆபாச படங்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், போனிலும் அழைத்தும் பேசியுள்ளார். பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் ஆசிரியரின் அத்துமீறல்கள், சீண்டல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் அத்துமீறல்களை வெளியே சொன்னால் படிப்பு பாதிக்கப்படுவதோடு, எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுமே என்ற அச்சத்தில் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்தனர். தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன.

இதையடுத்து, ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அதுகுறித்து குழந்தைகள் நல அலுவலரிடம் துணிச்சலுடன் முறையிட்டனர். அதன்பின், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு உட்பட மேலும் சில பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் தரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இது ஒருபுறம் இருக்க ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in