சேலத்தில் கடத்தப்பட்டு பெங்களூருவில் மீட்கப்பட்ட நிலையில் குட்கா பதுக்கிய வழக்கில் தந்தையுடன் இளைஞர் கைது

சேலத்தில் கடத்தப்பட்டு பெங்களூருவில் மீட்கப்பட்ட நிலையில் குட்கா பதுக்கிய வழக்கில் தந்தையுடன் இளைஞர் கைது
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட வட மாநில இளைஞரை, பெங்களூருவில் மீட்ட போலீஸார், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே மீட்கப்பட்ட இளைஞர் மற்றும் அவரது தந்தையை குட்கா பொருட்கள் பதுக்கிய வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அம்மாப்பேட்டை பட்டைக்கோயில் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூலாராம் என்பவரின் மகன் ஜெயராம் (22). இவர் மீதும் இவரது உறவினர் ஷாலாராம் (28) என்பவர் மீதும் சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில், குட்கா கடத்தல் வழக்கு உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், தந்தையின் மளிகைக் கடையில் இருந்த ஜெயராமை, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது.

இதையறிந்து , சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், ஜெயராமை மீட்பதற்கு உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயராமை கடத்திச் சென்ற கும்பல், பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸார் பெங்களூரு சென்ற நிலையில், கடத்தல் கும்பல் ஜெயராமை விடுவித்துவிட்டு தப்பியது. ஜெயராமை மீட்ட போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறும்போது, ‘வட மாநிலங்களில் இருந்து குட்கா, பான்பராக் உள்ளிட்டவற்றை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலுக்கும், ஜெயராம், அவரது உறவினர் ஷாலாராம் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது. இதில் ஏற்பட்ட தொழில் விரோதத்தால், ஜெயராம் கடத்தப்பட்டிருக்கலாம். அவரை கடத்திய கும்பலை கைது செய்த பின்னர் முழு விவரங்களும் தெரியவரும்’ என்றனர்.

இதனிடையே, ஜெயராமுக்கு செந்தமான குடோனில் பதுக்கப்பட்டிருந்த 58 கிலோ குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஜெயராம் அவரது தந்தை மூலாராம் ஆகியோரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் 25 பேர் கைது

இதனிடையே, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து, தற்போது வரை குட்கா, பான்பராக் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், தொடர் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in