

புதுச்சேரி: புதுவையில் உள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி, ஸ்பின்கோ, காரைக்காலில் உள்ள ஜெயப்பிரகாஷ் மில்களைஒன்றாக இணைத்து ஒரு அரசு கார்ப்பரேஷனின் மேற்பார்வையில் இயங்க வைத்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதோடு குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே ஏஎப்டி மில் மூடப்பட்டுள்ளது. சுதேசி, பாரதி மில்கள் மூடப்படவுள்ளன. இதற்கிடையே புதுச்சேரி திருபுவனையில் உள்ள கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான ஸ்பின்கோ நூற்பாலையில் 400 தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்பின்கோ ஆலையில் நூல் தயாரித்து அனுப்பப்படுகிறது. முழுமையாக இந்த ஆலை இயங்குவதில்லை. இந்த ஆலைக்கு அண்மையில் பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பின்பு திறந்த போது அங்கு மின் மோட்டார்கள் திருடப்பட்டு இருந்தன.
இதைக் கண்ட ஊழியர்கள் மின் மோட்டாரை திருடியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஆலையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவாண்டார்கோயில் பகுதியில் வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுப்பட்டிருந்த போது சாக்கு மூட்டையுடன் அவ்வழியே வந்த நான்கு பேரை போலீஸார் பிடித்து சோதனையிட்டனர். அந்த சாக்குமூட்டையில் மின் மோட்டார்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மனோகர் (25), சரவணன் (30), வினோத் குமார் என்ற சூர்யா (30), கலிய பெருமாள் (47), என்றும் இவர்கள் ஆலை மூடப்பட்டிருந்த நேரத்தில் தங்களின் நண்பர்களான நாகப்பன் (53), ராமராஜ் (30) ஆகியோர் வழிகாட்டுதலின் படி ஆலையின் பின்பக்கமாக சென்று மின் மோட்டர்களை திருடியதாக தெரிவித்தனர். திருடிய மோட்டார்களை விற்பனை செய்ய செல்லும் போது போலீஸார் அவர்களை பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
4 பேரையும் கைது செய்த போலீஸார், நாகப்பன் மற்றும் ராமராஜை அவர்களின் வீட்டில் கைது செய்தனர். இவர்கள் திருடி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.