ராமேசுவரத்தில் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் போலீஸார்

ராமேசுவரத்தில் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் போலீஸார்
Updated on
1 min read

மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 ஒடிசா மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமேசுவரத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை காவல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

ராமேசுவரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், அங்குள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் ராணா(34), பிரகாஷ் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இருவரும் ஜூன் 10 வரை நீதிமன்றக் காவலில் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ராமேசுவரத்தில் தங்கி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை போலீஸார் கணக்கெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, ராமேசுவரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள், வெளிமாநில நபர்களை பணிக்கு வைத்திருக்கும் கட்டிட ஒப்பந்ததாரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், பாணிபூரி, குல்பி ஐஸ் வைத்து தொழில்செய்து வருபவர்கள் வரும் ஜூன்15-க்குள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வெளிமாநில நபர்களின் புகைப்படம், ஆதார் அட்டை,தொடர்பு எண், தங்கியிருக்கும் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in