

பொன்னேரி: சென்னை, மணலி புதுநகர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லாரன்ஸ் என்பவர் வீட்டின் அருகில் சிலருடன் கூட்டமாக கூடி யாரோ ஒருவரை கொலை செய்ய திட்டமிடுவதாகவும் அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதாகவும் நேற்று முன் தினம் அதிகாலை மணலி புதுநகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மணலிபுதுநகர் போலீஸார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனர். அப்போது, அங்கிருந்த 8 பேர், போலீஸாரை கண்டதும் தப்பித்து ஓட முயன்றனர்.
அவர்களை போலீஸார் பிடித்தனர், அப்போது, 8 பேர் கும்பல், போலீஸாரை தள்ளிவிட்டு அருகே வந்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். தொடர்ந்து, போலீஸார் 8 பேர் கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள், சென்னை, மாத்தூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (23), ரத்திஷ் (24), சந்தோஷ் (21), கிருஷ்ணபிரசாத் (22), சசிகுமார் (20), சஞ்சய் (23), விக்னேஷ் (24), 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் முன்விரோதம் காரணமாக மாத்தூர் பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்ய, ஆயுதங்களுடன் சதிதிட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மணலிபுதுநகர் போலீஸார், 17 வயது சிறுவன், லாரன்ஸ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள இரும்பு கைப்பிடியுடன் கூடிய 6 அரிவாள்கள், இரு கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.