தென்காசி | வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

தென்காசி | வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே சாயமலை, மேல சிவகாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இனால், வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அழகுராஜா விண்ணப்பித்தார்.

இந்நிலையில், வாரிசு சான்றிதழ் வழங்க திருவேங்கடம் வட்டாட்சியர் மைதீன் பட்டாணி ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், பேரம் பேசி ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகுராஜா, இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதைஅடுத்து, போலீஸார் தந்த ரசாயனம்தடவிய ரூபாய் நோட்டுகளை திருவேங்கடம் வட்டாட்சியரிடம் நேற்று முன்தினம் மாலையில் அழகுராஜா கொடுத்துள்ளார்.

பணத்தை வட்டாட்சியர் பெற்றுக்கொண்டது தெரியவந்ததும் டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் விரைந்தனர். வட்டாட்சியரிடம் சோதனை நடத்தினர். ஆனால், அவரிடம் லஞ்ச பணம் இல்லை. எங்கோ பணத்தை ஒளித்து வைத்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், லஞ்ச பணத்தை ஒருவரிடம் வட்டாட்சியர் கொடுத்து வைத்துஇருந்தது தெரியவந்தது. இதைஅடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் மைதீன் பட்டாணியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in